புத்ராஜெயா: மலேசியாவில் டிசம்பர் 12ஆம் தேதி அமைச்சரவை மாற்றம் இடம்பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இதனால் சில அமைச்சுகள் பாதிக்கப்படும் என்று மேலிடத்திலிருந்து வந்த தகவல்கள் தெரிவித்தன.
இதற்கு முன்பு அமைச்சர்களாகச் சேவையாற்றிய சில மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் திரும்பலாம் என்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதன் முறையாக அமைச்சர்கள் ஆகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
“பிற்பகல் 3 மணிக்கு, பதவியேற்புச் சடங்கிற்கு முன்னர் அதிகாரபூர்வ அறிவிப்பு செய்யப்படும்,” என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
பிரதமர் அன்வார் இப்ராகிம் வழிநடத்தும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குப் பிறகு அமைச்சரவை மாற்றம் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
நன்கு செயல்படாத காரணத்திற்காக சில அமைச்சர்கள் குறைகூறப்பட்டதாலும் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் சேவையாற்ற முன்வரவேண்டும் என்று மற்றவர்கள் கூறுவதாலும் இந்த அமைச்சரவை மாற்றம் அரசாங்கத்தை வலுப்படுத்த உதவும் என்று நம்பப்படுகிறது.