சிங்கப்பூரில் சமரசப் பேச்சு நடத்தும் அனைத்துலக அதிகாரிகளின் முன்னிலையில் கம்போடியாவும் தாய்லாந்தும் தங்களுக்கு இடையிலான கடல்துறை தொடர்பான சச்சரவு குறித்த வாதங்களை முன்வைக்கவுள்ளன.
இந்த விவகாரத்தில் நீண்டகாலமாக அண்டை நாடுகளான இருதரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்துவருகின்றன. அவை இரண்டுக்கும் இடையே மோதல்கள் அதிகம் இருந்துவந்துள்ளன.
ஐநா ஆதரவுடனான நடவடிக்கை
நிரந்தர நடுவர் நீதிமன்றத்தில் (Permanent Court of Arbitration) ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் (ஐநா) ஆதரவுடனான இந்நடவடிக்கையை நோம்பென் தொடங்கிவைத்தது. தாய்லாந்து, வளைகுடாவில் எரிசக்திப் பயன்பாட்டுக்கான கூட்டு ஒப்பந்தத்திலிருந்து பேங்காக் பின்வாங்கிக்கொண்டதையடுத்து இந்நடவடிக்கை தொடங்கப்பட்டது.
2001ஆம் ஆண்டு கையெழுத்தான அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் 27,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட பகுதி சம்பந்தப்பட்டதாகும். தாய்லாந்து, கம்போடியா ஆகிய இருநாடுகளும் அதற்குச் சொந்தம் கொண்டாடிவருகின்றன.
‘எம்ஓயு 44’ ஒப்பந்தம்
‘எம்ஓயு 44’ என்றழைக்கப்படும் அந்த ஒப்பந்தத்திலிருந்து தாய்லாந்து கடந்த மே மாதம் பின்வாங்கிக்கொண்டது. அதைச் செயல்படுத்துவதில் முன்னேற்றம் ஏதும் காணப்படவில்லை என்பது பேங்காக்கின் வாதம்.
இருநாட்டு எல்லையில் இருதரப்புக்கும் இடையிலான பூசலுக்கும் இந்த விவகாரத்துக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்படுவதைத் தாய்லாந்துப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராகுல் மறுத்துள்ளார். அந்த எல்லைப் பூசல் சென்ற ஆண்டு இருமுறை சண்டையாக வெடித்தது. போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படும் வரை பலர் கொல்லப்பட்டனர், ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வீடுகளிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.
ஒப்புக்கொள்ளப்பட்ட அந்த இருதரப்பு ஒப்பந்தத்தைத் தாய்லாந்து தாமே முடிவெடுத்து ரத்து செய்ததைத் தொடர்ந்து இந்தத் தீர்வுகாணும் முறையைத் தாங்கள் நாடியதாக கம்போடியா சென்ற வாரம் தெரிவித்தது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுக்கிடையே இருந்துவரும் கடல்துறை தொடர்பான சச்சரவுக்குத் தீர்வுகாண இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டதாகக் கம்போடியா கூறியது.
அனைத்துலக சட்டத்தின்படி கம்போடியாவின் சுயஆட்சி முறையையும் கடல்துறை உரிமைகளையும் பாதுகாப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட் கடந்த ஜூன் மாதம் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் உள்ள உலகின் ஆகப் பழைமையான நடுவர் நீதிமன்றத்தில் ஐவரைக் கொண்ட அனைத்துலகச் சட்ட வல்லுநர்க் குழுவின் முன்னிலையில் இருநாடுகளின் பிரதிநிதிகளும் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) தங்களின் தொடக்க உரையை முன்வைப்பர்.

