வியட்னாம், லாவோசுடனான ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்ட கம்போடியா

வியட்னாம், லாவோசுடனான ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்ட கம்போடியா

1 mins read
d3b45b3f-3377-487d-ba9a-ca0a9cf06a46
இந்த முடிவு குறித்து வியட்னாம், லாவோசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் தெரிவித்தார். - படம்: ஏஎஃப்பி

நோம் பென்: பல ஆண்டுகாலமாக வியட்னாம், லாவோஸ் ஆகிய நாடுகளுடன் செய்துகொண்டிருந்த வட்டாரப் பொருளியல் மேம்பாட்டு ஒப்பந்தம் ஒன்றிலிருந்து கம்போடியா விலகிக்கொள்வதாக கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் தெரிவித்துள்ளார்.

கம்போடியா அதன் எல்லைகளை அண்டைநாடுகளுக்கு இழக்கக்கூடும் என்று விமர்சகர்கள் கவலை தெரிவித்து வந்த வேளையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

‘கம்போடியா-லாவோஸ்-வியட்னாம் மேம்பாட்டு முக்கோண வட்டாரம்’ என்ற அந்த ஒப்பந்தம் அண்மைய மாதங்களாக இணையத்திலும் வெளிநாட்டு ஆர்ப்பாட்டங்களிலும் பேசுபொருளாக உள்ளது.

இந்நிலையில், ஒப்பந்தத்திலிருந்து கம்போடியா விலகிக்கொள்வதாகவும் இது குறித்து வியட்னாமுக்கும் லாவோசுக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் செப்டம்பர் 20ஆம் தேதி திரு ஹுன் மானெட் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

கம்போடியாவின் நான்கு வடகிழக்குப் பகுதிகளைத் தமது நிர்வாகம் வெளிநாடுகளுக்கு விட்டுக்கொடுத்துவிட்டதாகச் சிலர் குற்றம் சாட்டியுள்ளதாகவும் இத்தகைய ‘தீவிரவாதிகள்’ ஒப்பந்தத்தை ‘ஓர் அரசியல் ஆயுதமாகப்’ பயன்படுத்துவதாகவும் அவர் சாடினார்.

ஒப்பந்தம் 1999ஆம் ஆண்டு கையெழுத்தானது. கம்போடியாவின் வடகிழக்குப் பகுதிகளுக்கும் லாவோஸ், வியாட்நாமின் பகுதிகளுக்கும் இடையே பொருளியல் மேம்பாட்டையும் வர்த்தகத்தையும் முடுக்கிவிடுவதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இருப்பினும், இந்த ஒப்பந்தம் நியாயமற்ற முறையில் வெளிநாடுகளுக்கே சாதகமாக இருக்கும் என்று சில எதிர்க்கட்சி ஆர்வலர்களும் வெளிநாடுகளில் வாழும் கம்போடியர்களும் கவலை தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்