ஒட்டாவா: ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து, கனடா அரசும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கவிருக்கிறது.
அதற்கு வகைசெய்யும் புதிய மின்னிலக்கப் பாதுகாப்பு மசோதா புதன்கிழமை (ஜூன் 10) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
குறிப்பிட்ட பாதுகாப்புத் தரநிலைகளை நிறைவுசெய்யும் தளங்களுக்கு மட்டும் அதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பேசுசெயலிகளை (chatbots) பாதுகாப்பானதாக மாற்றுவதற்கும் பாதுகாப்புத் தரநிலைகளை வகுப்பதற்கும் ஒரு புதிய மின்னிலக்க ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்குவதை அம்மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாட்டின் ஆக மோசமான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், தாக்குதல் திட்டத்தை அறிந்திருந்தும் காவல்துறையை எச்சரிக்கவில்லை எனக் கூறி, ‘ஓப்பன்ஏஐ’ நிறுவனத்தின்மீது அண்மையில் வழக்கு தொடுத்தன.
அதனைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா இத்தகைய தடையை முதன்முதலில் விதித்ததை அடுத்து, சமூக ஊடக நிறுவனங்கள் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் பதின்ம வயதினரின் கணக்குகளை முடக்கின.
பிரான்ஸ், டென்மார்க், போலந்து ஆகிய நாடுகளும் இத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன. 2027 ஜனவரியிலிருந்து 15 வயதிற்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று கிரீஸ் அறிவித்துள்ளது.

