சீக்கியத் தலைவர் நிஜ்ஜார் கொலை வழக்கு: மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டது

சீக்கியத் தலைவர் நிஜ்ஜார் கொலை வழக்கு: மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டது

2 mins read
98dd7695-6563-4db4-a768-f451fd60ca14
குற்றம் சாட்டப்பட்டுள்ள கரண் பிரார், கமல்பிரீத் சிங், கரண்பிரீத் சிங். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

ஒட்டாவா: சீக்கியப் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கொல்லப்பட்டதன் தொடர்பில் கனடியக் காவல்துறையினர் மூன்று இந்திய ஆடவர்களை மே 3ஆம் தேதி கைதுசெய்து குற்றம் சாட்டியுள்ளனர்.

கரண்பிரீத் சிங், 28, கமல்பிரீத் சிங், 22, கரண் பிரார், 22, ஆகிய அந்த மூவருடனும் இந்திய அரசாங்கத்துக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அதிக சீக்கியர்கள் உள்ள இடமான சர்ரே நகரின் சீக்கியக் கோவில் வெளியே 45 வயது நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதைத் தொடர்ந்து இச்சம்பவத்துடன் இந்திய அரசாங்கத்துக்குத் தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதென கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். இதனால் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இருந்த நல்லுறவு, நெருக்கடி நிலையைச் சந்தித்துள்ளது.

“இந்திய அரசாங்கத்துடன் அவர்கள் கொண்டுள்ள தொடர்புகளை நாங்கள் விசாரித்து வருகிறோம்,” என்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தியாளர் கூட்டத்தில் அரச கனடிய காவல்துறை கண்காணிப்பாளர் மந்தீப் மூக்கர் தெரிவித்தார்.

கனடிய குடியுரிமை உள்ள நிஜ்ஜார், காலிஸ்தான் எனும் சுதந்திர சீக்கிய தேசத்தை உருவாக்கும் இயக்கத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். கனடாவிலுள்ள சீக்கியப் பிரிவினைவாதக் குழுக்கள் பலகாலமாகவே இந்தியாவை அதிருப்தி அடையச் செய்துள்ளன.

நிஜ்ஜாரை இந்தியா ‘பயங்கரவாதி’ என்றும் அறிவித்திருந்தது.

“இந்த விசாரணை இத்துடன் முடிந்துவிடப் போவதில்லை. இந்தக் கொலையுடன் வேறு சிலருக்கும் தொடர்பிருப்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் ஒவ்வொருவரையும் கண்டுபிடித்துக் கைது செய்வதில் நாங்கள் தொடர்ந்து கடப்பாடு கொண்டுள்ளோம்,” என்றார் அரச கனடிய காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் டேவிட் டெபவுல்.

அல்பெர்ட்டாவில் உள்ள எட்மோண்டன் நகரில் மூன்று இந்திய நாட்டவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஏப்ரல் 6ஆம் தேதி பிரிட்டிஷ் கொலம்பியாவை வந்தடைவர்.

குறிப்புச் சொற்கள்