கனடாவில் சிகரெட் பழக்கத்தைத் துடைத்தொழிக்க புது முயற்சியை கையில் எடுத்துள்ளது அந்நாட்டு அரசாங்கம்.
சிகரெட் பெட்டிகளில் மட்டும் எச்சரிக்கை வாசகம் இல்லாமல் இனி ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம் தெளிவாகத் தெரியும்படி அச்சிட உத்தரவிடப்பட்டுள்ளது.
வேறு எந்த நாட்டிலும் இதுபோன்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இது படிப்படியாக நாடு முழுவதும் நடப்புக்கு வரும் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு செய்வதன் மூலம் கனடாவில் புகைக்கும் பழக்கத்தை பலர் விடுவார்கள் என்றும் அது கூறியது.
2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதிக்குள் நாடு முழுவதும் அனைத்துவிதமான சிகரெட்டுகளிலும் எச்சரிக்கை வாசகம் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிகரெட் புகை குழந்தைகளைப் பாதிக்கும், ஒவ்வொரு முறை சிகரெட் புகைப்பது விக்ஷம் அருந்துவதற்கு சமம் போன்ற வரிகள் ஆங்கிலத்திலும் பிரெஞ்சு மொழியிலும் சிகரெட்டுகளில் இடம்பெற்றிருக்கும்.
கனடாவில் ஆண்டிற்கு கிட்டத்தட்ட 48,000 பேர் புகை பழக்கம் காரணமாக மடிகின்றனர்.