டொரோன்டோ: கனடாவில் பதின்மவயது இளையர் ஒருவர் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த இளையரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கனடா அதிகாரிகள் நவம்பர் 12ஆம் தேதியன்று கூறினர்.
பறவைக் காய்ச்சலால் கனடாவில் மனிதர் ஒருவருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பதின்மவயது இளையருக்கு அந்நோய் எவ்வாறு தொற்றிக்கொண்டது என்பதை கண்டறிய கனடாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறவைப் பண்ணைகளுடன் அவருக்குத் தொடர்பு இருந்ததாகத் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
கனடாவில் உள்ள சில பறவைப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், எச்5என்1 என்று அழைக்கப்படும் இந்தக் கிருமியால் பொதுமக்களின் உயிருக்கு அபாயம் ஏற்படும் சாத்தியங்கள் மிகவும் குறைவு என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.
மக்களிடையே அது எளிதில் பரவக்கூடியதல்ல என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் அக்கிருமி உருமாறிப் பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


