மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள நினோய் அக்கினோ அனைத்துலக விமான நிலையத்தின் (NAIA) முதல் முனைய நுழைவாயிலில் கார் ஒன்று மோதியதில் நான்கு வயதுச் சிறுமியும் ஆடவர் ஒருவரும் மாண்டுவிட்டதாகப் பிலிப்பீன்ஸ் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்ததாக அது குறிப்பிட்டது.
ஞாயிற்றுக்கிழமை (மே 4) காலை இச்சம்பவம் நடந்ததாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்தது.
“இச்சம்பவத்தால் நேர்ந்த கவலை குறித்து அறிந்துள்ளோம். குறிப்பாகச் சமூக ஊடகங்களில் பரவிய படங்களால் கவலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் ஊகங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் தகவல்கள் உறுதிசெய்யப்படும் வரை காத்திருக்கும்படியும் கேட்டுக்கொள்கிறோம். உறுதியான தகவல்கள் கிடைத்தவுடன் அவை வெளியிடப்படும்,” என்று விமான நிலைய அறிக்கை கூறுகிறது.
எக்ஸ் தளத்தில் ‘டிஇஸட்பிபி’ வானொலி பதிவிட்டுள்ள படங்கள், தரையில் படுத்திருக்கும் ஒருவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்படுவதைக் காட்டுகின்றன.
விமான நிலைய நுழைவாயிலுக்கு அருகே கண்ணாடித் துண்டுகள் சிதறிக் கிடப்பதைக் காணமுடிகிறது.
விமான நிலையக் கதவுகளில் மோதியதால் கறுப்பு கார் ஒன்றின் முன்பகுதி சேதமடைந்திருப்பதையும் அந்தப் படங்கள் காட்டுகின்றன.
காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் வாகன ஓட்டுநரைக் காவல்துறை தடுத்து வைத்திருப்பதாகவும் விமான நிலைய நிர்வாகம் கூறியது.