கோலா பிலா: சாலையில் ஓடிய கார் அருகிலிருந்த வீடு ஒன்றின் கூரைமீது பாய்ந்ததில் இருவர் காயமுற்றனர்.
இவ்விபத்து கடந்த வியாழக்கிழமை (மே 28) இரவு 7.30 மணியளவில் மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலம், செரி மெனாந்தியில் நேர்ந்தது.
செரி மெனாந்தியிலிருந்து சிரம்பான் நோக்கிச் சென்றபோது ஓட்டுநர் அந்த காரின் கட்டுப்பாட்டை இழந்தார். அதனையடுத்து, அந்த கார் சாலையில் வழுக்கிச் சென்று, அந்த மேடான சாலைக்குக் கீழே இருந்த ஓட்டுவீட்டின்மேல் பாய்ந்தது.
“விபத்து நேர்ந்தபோது அவ்வீட்டின் குடியிருப்பாளர் அங்கு இல்லை,” என்று கோலா பிலா காவல்துறைத் தலைவர் முஸ்தபா ஹுசைன் தெரிவித்தார்.
காரினுள் இருந்த பயணிகள் இருவர் லேசாகக் காயமடைந்தனர். அவர்களுக்குக் கோலா பிலா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. காரின் 63 வயது ஓட்டுநர்க்கும் அதிலிருந்த இன்னொரு பயணிக்கும் காயமேற்படவில்லை.
விபத்திற்குள்ளான கார் அந்த வீட்டின் ஓடுகளை உடைத்துக்கொண்டு, முன்பகுதி தரையில் முட்டியபடி செங்குத்தாக நின்றிருந்தது உள்ளூர்வாசிகளின் கவனத்தை ஈர்த்தது.
விபத்து தொடர்பில் விசாரணை நடைபெறுகிறது.

