குற்றமா விபத்தா என்று அறிய புலன்விசாரணை தொடர்கிறது
இவாக்கி/ஃபுக்குஷிமா: ஜப்பானின் ஃபுக்குஷிமா மாவட்டத்தில் உள்ள இவாக்கி என்ற பகுதியில் உள்ள ஒனஹமா துறைமுகத்தில் சனிக்கிழமை காலை (ஜூன் 27) நடந்த விபத்தில் கார் ஒன்று நீரில் மூழ்கியது.
அச்சம்பவத்தில் ஓர் ஆடவர் மரணமடைந்ததுடன் ஒரு மாது சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த வாகனத்தில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் மூவரும் மீட்புப் படையினரால் காப்பாற்றப்பட்டனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவர்களில் சைதாமாவின் சகுரா என்ற இடத்தைச் சேர்ந்த 86 வயது ஆடவர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மீட்கப்பட்ட எஞ்சிய இருவரில் 80 வயது மாது சுயநினைவின்றி மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மற்றொரு 60 வயது ஆடவர் சுயநினைவோடு உள்ளார்.
அன்றைய தினம் காலை 6.35 மணியளவில் வழிப்போக்கர் ஒருவர் வாகனம் ஒன்று பயணிகளுடன் துறைமுகத்தில் உள்ள தண்ணீரில் மூழ்குவதைக் கண்டு உடனடியாக அவசர உதவிக்கு தொலைபேசியில் அழைத்துள்ளார்.
அங்கு வந்த மீட்புக் குழுவினர், வாகனத்திலிருந்து 30 நிமிடங்களில் மூவரையும் வெளியேற்றினர்.
வாகனம் தீடீர் என்று நிறுத்தியதாகத் தடயங்கள் இல்லை
வாகனத்தை அவசரமாகச் சாலையில் நிறுத்தியதற்கான தடயங்கள் ஏதுமில்லை என்று இவாக்கியின் ஹிகாஷி காவல் நிலையம் தெரிவித்தது.
சம்பவம் விபத்தா அல்லது குற்றச் செயலா என்பதை புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

