பல நாடுகளைச் சேர்ந்த ஆகப் பெரிய கார்டினல் குழு, புதிய போப்பாண்டவரைத் தேர்வுசெய்வதற்கான பணிகளை வியாழக்கிழமை (மே 8) மீண்டும் தொடங்கியுள்ளனர்.
ரோமன் கத்தோலிக்க கார்டினல்கள் புதிய போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்க சிஸ்டின் தேவாலயத்துக்கு மீண்டும் திரும்பினர். அவர்கள், மே 7ஆம் தேதி 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான சடங்குபூர்வ நடைமுறையைத் தொடங்கினர்.
புதிய போப்பாண்டவர் இன்னும் தேர்வுசெய்யப்படவில்லை என்பதைக் குறிக்கும் கரும்புகை, செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்திலிருந்து பார்க்கக்கூடிய சிறப்பு புகைப்போக்கியிலிருந்து வெளியானது.
பல ஆண்டுகளாக எடுத்த எடுப்பிலேயே எந்தப் போப் பாண்டவரும் தேர்வாவதில்லை. அண்மை காலங்களில், நான்கு சுற்று வாக்களிப்பு இடம்பெற்ற பிறகு இரண்டாம் நாளில் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது.
இந்த முறை சாதனை அளவாக 70 நாடுகளைச் சேர்ந்த 133 கார்டினல்கள் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்கின்றனர்.
அவர்களில் ஒருவர் சிங்கப்பூரைச் சேர்ந்த கார்டினல் வில்லியம் கோ (படம்). சிங்கப்பூர் கத்தோலிக்க தேவாலயத்தின் தலைவரான 67 வயது கார்டினல் கோ, போப் பாண்டவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபடும் முதல் சிங்கப்பூரர்.
1.4 பில்லியன் கத்தோலிக்கர்களுக்கான தலைவர் தேர்ந்தெடுக்க ரோமில் கூடியிருக்கும் இதர கார்டினல்களைப் போல கார்டினல் கோவும் அடுத்த போப் பாண்டவராகத் தேர்வுசெய்யப்படுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்.
தேவாலயத்தில் போப்புக்கு அடுத்தபடியான இடத்தில் இருப்பவர்கள் கார்டினல்கள்.
தொடர்புடைய செய்திகள்
போப்பின் மறைவுக்குப் பிறகு 80 வயதுக்குக் கீழுள்ள அனைத்து கார்டினல்களும் புதிய போப் பாண்டவரைத் தேர்வுசெய்ய ஒன்றுகூடுவர்.
ஏப்ரல் 21ஆம் தேதி காலமான போப் ஃபிரான்சிஸ், கார்டினல் கோவை 2022ஆம் ஆண்டு கார்டினல் பதவியில் நியமித்தார். கார்டினல் கோ சிங்கப்பூரில் 395,000 கத்தோலிக்கர்கள் கொண்ட தேவாலயத்துக்குத் தலைமைத் தாங்குகிறார்.

