தோக்கியோ: ஜப்பான் அரச குடும்பத்தில் நிலவும் வாரிசு பற்றாக்குறையைச் சமாளிக்க, அந்நாட்டு நாடாளுமன்றம் பாரம்பரிய வாரிசு சட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. இருப்பினும், பெண்கள் பேரரசியாக அரியணை ஏறுவதற்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது.
புதிய மாற்றங்களின்படி, அரச குடும்ப இளவரசிகள் சாதாரண குடிமக்களைத் திருமணம் செய்தாலும் தங்களின் அரச தகுதியைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.
மேலும், இரண்டாம் உலகப் போருக்குப் பின் அரச தகுதியை இழந்த கிளைக் குடும்பங்களின் ஆண் வாரிசுகளைத் தத்தெடுக்கவும் சட்டம் வழிவகை செய்கிறது.
தற்போதைய பேரரசர் நருஹிட்டோவின் மகள் 24 வயதான இளவரசி ஐகோ ஜப்பானிய மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றவர்.
ஏறத்தாழ 80 விழுக்காடு மக்கள் பெண்கள் பேரரசியாவதை ஆதரித்த போதிலும், பிரதமர் சானே தக்காய்ச்சி தலைமையிலான பழைமைவாத அரசு பாரம்பரிய விதியை மாற்ற மறுத்துவிட்டது.
தற்போது அரச குடும்பத்தில் 16 உறுப்பினர்கள் மட்டுமே உள்ள சூழலில், அடுத்த தலைமுறைக்கான ஒரே ஆண் வாரிசாக 19 வயது இளவரசர் ஹிசாஹிட்டோ மட்டுமே உள்ளார்.
வாரிசு தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும், அதேநேரம் பாரம்பரியத்தைக் காக்கவும் இந்த இடைக்கால வழிமுறையை ஜப்பான் தேர்வு செய்துள்ளது.


