சிறார் பாதுகாப்பு விதிமீறல்; மெட்டாவுக்கு $479.65 மி. அபராதம்

சிறார் பாதுகாப்பு விதிமீறல்; மெட்டாவுக்கு $479.65 மி. அபராதம்

1 mins read
4af6cc6f-f440-4dde-948d-5b5237030948
மெட்டா நிறுவனத்தின் சின்னம். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

சான்ட ஃபெ: சிறார் பாதுகாப்பு தொடர்பான விதிமீறலில் ஈடுபட்டதன் காரணமாக அமெரிக்க நீதிமன்றம் ஒன்று மெட்டா நிறுவனத்துக்கு 375 மில்லியன் டாலர் (479.65 மில்லியன் வெள்ளி) அபராதம் விதித்துள்ளது.

நியூ மெக்சிகோ மாநில நீதிமன்றம் ஒன்றில் நீதிபதிகள் குழு அந்தத் தீர்ப்பை செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) வழங்கியது. இத்தீர்ப்பு, இதுவரை காணப்படாத ஒரு நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

மெட்டா, குழந்தைகளின் பலவீனங்களையும் அனுபவமின்மையையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டதாக அந்த நீதிபதிகள் குழு தீர்மானித்தது. மேலும், பாலியல் ரீதியாக சிறார் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து தங்களுக்குத் தெரிந்த விவரங்களை மெட்டா அதன் சமூக ஊடகத் தளங்களிலிருந்து மூடி மறைத்ததாகவும் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு, தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராகக் கிளம்பியுள்ள மாறுபட்ட போக்கையும் அவற்றின் மீது அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்கத் தயாராய் இருப்பதையும் சுட்டிக்காட்டுவதாகக் கூறப்படுகிறது.

ஏழு வாரங்களாக இவ்வழக்கு நீடித்தது. கலிஃபோர்னியா மாநில நீதிமன்றம் ஒன்றில் இதுபோன்ற மற்றொரு வழக்கில் மெட்டா, யூடியூப் ஆகியவற்றைப் பொறுப்பேற்க வைக்கவேண்டுமா என்பதன் தொடர்பில் முடிவெடுக்க நீதிபதிகள் தனிமையில் ஆலோசித்துவரும் நிலையில் நியூ மெக்சிகோவில் இந்தத் தீர்ப்பு வெளிவந்துள்ளது.

இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றுக்கு உரிமை வகிக்கும் மெட்டா பாதுகாப்பைவிட லாபத்துக்கே அதிக முக்கியத்துவம் தந்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். நீதிபதிகள் குழுவும் அவர்களின் பக்கம் நின்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்