நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் வட்டாரத்திற்கு உட்பட்ட புரூக்ளின் பகுதியில் இருக்கும் குற்றவியல் நீதிமன்றத்தில் சனிக்கிழமை (மே 16) வழக்கத்திற்கு மாறான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
சிங்கப்பூர் நேரப்படி அன்றைய தினம் முற்பகல் 11.30 மணியளவில் (நியூயார்க் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணி) போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின்கீழ் நீதிபதியிடம் முன்னிலையாவதற்காகக் காத்திருந்த 33 வயது கர்ப்பிணிக்குத் திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டது.
நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள், நீதிபதி ஆகியோர் உடனடியாகச் செயல்பட்டு நீதிமன்ற அறையைத் தற்காலிகப் பிரசவக் கூடமாக மாற்றினர்.
நீதிமன்ற அதிகாரி ராபர்ட் விங்க்ளரின் உதவியுடன் சமந்தா ரண்டாஸோ என்ற அப்பெண்ணுக்கு ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது.
முன்னதாக, போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின்கீழ் மே 14ஆம் தேதி அப்பெண் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுவதற்கு முன்பு, 30 மணி நேரம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும், சம்பவத்தன்று பிள்ளையை அவர் பெற்றெடுப்பார் என்று மருத்துவர்கள் நினைக்கவில்லை.
சமந்தாவுக்கு எதிராகப் பிடியாணை நிலுவையில் இருந்ததால், காவல் நிலையத்திலிருந்து விடுவிக்கப்படும் சலுகை அனுமதிச் சீட்டுக் கொடுக்கப்பட அவர் தகுதி பெறவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
கர்ப்பிணியின் பிள்ளைப்பேற்றுக்கு உதவிய நீதிமன்ற அதிகாரிகளின் செயல்பாடுகள் பரவலாகப் பாராட்டப்பட்டன.

