ஜெனீவா: இன்றைய மின்னிலக்க உலகில் குழந்தைகளைப் பாதுகாப்பான முறையில் இணையத்தைப் பயன்படுத்த வைப்பது மிக அவசரமான முதன்மைத் தேவையாகும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறியுள்ளது.
“செயலிகளில் உள்ள தொடர்ச்சியான தகவல் அறிவிப்புகள், தானாக இயங்கும் காணொளிகள், முடிவில்லா தேடல்கள் போன்ற சிறாரை அடிமையாக்கும் வடிவமைப்புத் தேர்வுகளே குழந்தைகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன,” என்று ஐநா மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் வோல்கர் டெர்க் கூறினார்.
எனவே, தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் தளங்களை வடிவமைக்கும் போதே குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் அம்சங்களை இணைப்பதைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், சமூக ஊடகங்களுக்கு ஒட்டுமொத்தமாகத் தடை விதிப்பது மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வாகாது என்றும், அது குழந்தைகளை இன்னும் ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிடும் என்றும் ஐநா மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் தொடர்பில் வணிக நோக்கங்களுக்காகக் சிறார்களை குறிவைப்பதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்பது உட்பட, இணையத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 முக்கிய வழிகாட்டுதல்களையும் ஐநா வெளியிட்டுள்ளது.

