டிக் டாக் மற்றும் வீசெட் செயலிகளை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தடை செய்ய உத்தரவிட்டதை சீனா வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்நடவடிக்கை வியாபார நடவடிக்கைகளுக்கு எதிரான அரசியல் சதி என்றும் அந்நாடு சாடியது.
இந்த இரண்டு செயலிகளை 45 நாட்களுக்குள் தடை செய்யும் அதிபர் உத்தரவுகள் இரண்டை திரு டிரம்ப் நேற்று முன்தினம் பிறப்பித்தார். சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு பெரும் பாதிப்புக்குள்ளான இந்நேரத்தில் திரு டிரம்ப்பின் முடிவு வெளிவந்தது.
பாதுகாப்பு அக்கறைகளே இந்தத் தடைக்கான காரணம் என அமெரிக்கத் தரப்பு கூறுகிறது. செப்டம்பர் 20ஆம் தேதி இந்தத் தடை நடப்புக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனீட்டாளர்களின் தனிப்பட்ட தரவுகளை இந்தச் செயலிகள் பெருமளவில் திரட்டுவதாகவும் அந்தத் தரவுகள் இறுதியில் சீன அரசாங்கத்தைச் சென்று சேர்வதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.
அமெரிக்கா இதன் மூலம் தனது அதிகாரத்தை அப்பட்டமாக வெளிப்படுத்த நினைப்பதாக சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் தெரிவித்தார். சீனாவின் பதில் நடவடிக்கையைப் பற்றி அவர் இதுவரை எதுவும் கூறவில்லை.