பெரும்பான்மையான கத்தோலிக்கர்களைக் கொண்ட பிலிப்பீன்சின் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தைச் சீர்குலைத்து, நாட்டைச் புரட்டிப் போட்டது பான்ஃபோன் புயல்.
மத்திய பிலிப்பீன்சின் தொலைதூர கிராமங்களையும் பிரபல சுற்றுலாத் தலங்களையும் தாக்கிய புயலில் குறைந்தது 16 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர்.
‘உர்சுலா’ என்று பிலிப்பீன்ஸ் மக்களால் அழைக்கப்படும் பான்ஃபோன், மின் கம்பங்களையும் மரங்களையும் சாய்த்தபடி மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்று அடித்தது. வீடுகளின் கூரைகள் பறந்தன.
புயல் காற்றுடன் கடும் மழையும் பெய்ததில் கடலோரப் பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. புயலைத் தொடர்ந்து பெய்த கனமழையால் நாட்டின் பல பகுதிகளும் வெள்ளக் காடாகியுள்ளது.
மின்கம்பங்கள் விழுந்ததால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இணைய சேவைகள், தொலைபேசி கட்டமைப்புகள் துண்டிக்கப்பட்டதால், புயலினால் ஏற்பட்ட முழுமையான சேதத்தைக் கணக்கிட முடியவில்லை என்று பேரிடர் நிர்வாகத் துறை அதிகாரிகள் கூறினர்.
அதிக பாதிப்புக்குள்ளான மத்திய பிலிப்பீன்சின் விசாயாஸ் தீவுகளைச் சேர்ந்த கிராமங்கள், நகரங்களில், 16 பேர் உயிரிழந்திருப்பதாக, பேரிடர் நிர்வாகத் துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. காலிபோ விமான நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ளது. அங்கு சாலைகள் இன்னமும் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன என்று புயலில் மாட்டிக்கொண்ட கொரிய நாட்டு சுற்றுப்பயணி ஜுங் பியோங் இன்ஸ்டகிராமில் எழுதியுள்ளார்.
புயல் தாக்குவதற்கு முன்பாக, 10,000க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளிலிருந்து வலுக்கட்டாயமாக பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.