சிட்னி: அமெரிக்கா விதித்துள்ள புதிய இறக்குமதி வரிகள் குறித்து அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்புடன் நேரில் பேசப்போவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி ஆல்பனீஸ் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) தெரிவித்தார்.
தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தித் தயாரிக்கப்படும் பொருள்களின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதாகக் கூறி, ஆஸ்திரேலியா உட்பட்ட 60 வர்த்தகப் பங்காளி நாடுகள்மீது அமெரிக்கா அண்மையில் புதிய இறக்குமதி வரிகளை விதித்தது.
தற்காலிகமாக அமலிலிருந்த 10 விழுக்காட்டு வரி காலாவதியான நிலையில், இந்த புதிய வரிவிதிப்பு நடப்புக்கு வந்துள்ளது.
அமெரிக்க அரசின் இச் செயலால், ஆஸ்திரேலியா உட்பட 38 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 12.5 விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது.
அதில் 17 நாடுகளுக்கு 10 விழுக்காட்டு வரியும், ஐந்து நாடுகளுக்கு ஒருவித கலப்பு வகையான வரியும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நடவடிக்கை நியாயமற்றது என்றும், அதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் ஆல்பனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி அரசாங்கம் கூறியுள்ளது.
“அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே உள்ள அனைத்து நிலை உறவுகளிலும் நாங்கள் இந்த வரி விதிப்பை முன்வைப்போம், அதனை ஏற்கெனவே செய்தும்விட்டோம்,” என்று பிரதமர் அல்பனீஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

