திரிப்போலி: லிபியாவின் தலைநகர் திரிப்போலியில் இரு முன்னணி ஆயுதக் குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. அந்த இரு குழுக்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 27பேர் கொல்லப்பட்டனர் எனவும் 106பேர் படுகாயமடைந்தனர் எனவும் அந்நாட்டில் செயல்படும் அவசரகால மருத்துவ உதவியை வழங்கும் மையம் ஒன்று புதன்கிழமை தெரிவித்தது.
திரிப்போலியின் மேற்குப் பகுதியில் செயல்படும் இந்த மையம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கையைப் பதிவிட்டிருந்தது.
அந்த இரு குழுக்களுக்கிடையே மோதல் திங்கட்கிழமை இரவு வெடித்தது என்றும் அது செவ்வாய்க்கிழமை வரை நீடித்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 234 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன என அந்த மையம் தெரிவித்தது.

