சிடுவார்ஜோ, இந்தோனீசியா: இந்தோனீசியாவின் ஜாவா தீவில் இடிந்து விழுந்த பள்ளிக்கூடத்தின் இடிபாடுகளில் இன்னும் கிட்டத்தட்ட 59 பேர் சிக்கியுள்ளனர் என்று அந்நாட்டு மீட்புச் சேவை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் நேரப்படி வியாழக்கிழமை (அக்டோபர் 2) நள்ளிரவு நிலவரப்படி 59 பேர் சிக்கியிருப்பதாகத் தேசியப் பேரிடர், மீட்பு அமைப்பின் பேச்சாளர் திரு அப்துல் முஹாரி குறிப்பிட்டார்.
இடிபாடுகளில் உயிருடன் இருப்போர் இன்னும் மீட்கப்படாததால் சிக்கியுள்ளோர் எண்ணிக்கை மாறுகிறது என்றார் அவர்.
பலமாடி கட்டடப் பள்ளிக்கூடம் வெளியிட்ட பதிவேட்டில் உள்ள பெயர்ப் பட்டியலின் அடிப்படையில் சிக்கியுள்ளோர் குறித்த எண்ணிக்கை வெளியிடப்பட்டது என்று திரு முஹாரி சொன்னார்.
கடந்த மாதம் 29ஆம் தேதி மதிய தொழுகைக்காக மாணவர்கள் பள்ளி வளாகத்தில் ஒன்றுகூடியபோது கட்டடம் இடிந்து விழுந்தது. அதில் குறைந்தது ஐவர் மாண்டனர்.
அக்டோபர் 1ஆம் தேதி மீட்பு அதிகாரிகள் இடிபாடுகளுக்கு இடையில் உயிருடன் சிக்கியிருந்த ஐவரை மீட்டனர்.
இந்நிலையில், மாணவர்களை மீட்க இன்னும் தீவிரமான நடவடிக்கை எடுக்கும்படி பெற்றோர் நெருக்குதல் அளித்துவருகின்றனர். இன்னும் பல மாணவர்கள் உயிருடன் இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
பள்ளி வளாகம் விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
வளாகத்தின் கட்டுமானம் அரைகுறையாக இருந்ததைத் தொடக்க கட்ட அறிகுறிகள் காட்டுவதாக வல்லுநர்கள் கூறினர்.