லீப்சிக்/ஜெர்மனி: கிழக்கு ஜெர்மனியின் லீப்சிக்/ஹாலெ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ‘டிஹெச்எல்’ நிறுவனத்தின் ‘கார்கோ’ எனப்படும் சரக்குகளை ஏற்றிச் செல்லும் விமானம், உயர எழும்பிக் கொண்டிருந்தபோது எதன் மீதோ மோதியது.
எதிர்பாராத சம்பவங்களைத் தவிர்க்கும்விதமாக அந்த விமானம் 215 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ஹனோவர் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது.
இதன் விவரங்களை ராய்ட்டர்ஸ் ஊடகம் புதன்கிழமை (ஆகஸ்ட் 5) வெளியிட்டது. இரவு நேரத்தில் விமானம் லீப்சிக்கிலிருந்து புறப்பட்டபோது விமான நிலையம் அருகே ஆளில்லா வானூர்தி (ட்ரோன்) ஒன்று கிடந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்த வானூர்தியில் வெடிபொருள்கள் கண்டெடுக்கப்பட்டதாக ‘பில்ட்’ எனப்படும் ஜெர்மனியின் முக்கிய நாளிதழ் தெரிவித்துள்ளது.
லீப்சிக் விமான நிலையத்தில் உள்ள கிழக்கு ஓடுபாதை டிஹெச்எல் வர்த்தக விமானத்துடன் உக்ரேனின் ‘அன்டநோவ்’ விமானமும் வழக்கமாகப் பயன்படுத்தும் முக்கியப் பகுதியாகும்.
அந்த ஓடுபாதையில் வெடிபொருள் நிபுணர்கள் சோதனைகள் மேற்கொள்வதால் அது மூடப்பட்டுள்ளது என்று காவல்துறை பேச்சாளர் ஒருவர் கூறினார்.
பல அனுமதி வழங்கப்படாத ஆளில்லா வானுர்திகள் அண்மையில் ஜெர்மனியின் விமான நிலையங்கள், ராணுவத் தளங்கள், எரிபொருள் முனையங்கள், துறைமுகங்கள், தளவாட நிறுவனங்கள் போன்றவற்றின்மேல் தென்பட்டுள்ளன.
அவற்றை ரஷ்யாவின் ரகசிய உளவாளிகள் ஏவியிருக்கலாம் என்று அரசாங்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.


