ஹனோய்: வியட்னாமில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியால் முன்மொழியப்பட்ட வேட்பாளர் பட்டியலிலிருந்து 500 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக மில்லியன் கணக்கான மக்கள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) வாக்களித்தனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தத் தேர்தலில், சுமார் 7.35 மில்லியன் வாக்காளர்கள் உள்ளூர் ஆட்சிமன்றப் பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டது வியட்னாமிய அரசாங்கம். வாக்கெடுப்புக்கு முன்னதாகவே நாட்டின் மிக உயரிய பதவிகளை யார் வகிக்கப் போகிறார்கள் என மூத்த கம்யூனிஸ்ட் அதிகாரிகள் தீர்மானிப்பது அங்கு வழக்கம்.
ஜனநாயக நடைமுறைக்கான மிகச்சில அங்கீகாரங்களில் ஒன்றாகவே இந்தத் தேர்தல் பார்க்கப்படுகிறது.
தேசியத் தேர்தல் ஆணையத் தகவல்படி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 864 வேட்பாளர்களில் கிட்டத்தட்ட 93 விழுக்காட்டினர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஆவர்.
தன்னிச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 2021ல் இருந்த 8.5 விழுக்காட்டிலிருந்து தற்போது 7.5 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இதன் மூலம், நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியின் பெருமளவிலான ஆதிக்கம் தொடர்வது உறுதியாகியுள்ளது.

