ஜோகூர்பாரு: மலேசிய அரசாங்கத்துக்கும் ஜோகூரில் இயங்கும் நெட்வொர்க் பள்ளிக்கும் இடையிலான சர்ச்சை தீர்ந்தபாடில்லை.
உரிமமின்றிச் செயல்பட்டதாலும் தவறான விளம்பரங்களை பார்வைக்கு வைத்ததாலும் ஜோகூரின் இஸ்கந்தர் புத்ரி நகர மன்றம் அப்பள்ளியை உடனடியாக மூடவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளதாக மாநில முதல்வர் ஒன் ஹஃபிஸ் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) தெரிவித்தார்.
ஆயினும், அப்பள்ளியின் அமெரிக்க முதலீட்டாளரான பாலாஜி ஸ்ரீநிவாசன், அந்தக் குற்றச்சாட்டுகளையும் பள்ளி மூடப்படுவதையும் மறுத்தார். அப்பள்ளிக்கு அதிகாரிகளிடம் இருந்து இரு அறிக்கைகள் அனுப்பட்டுள்ளதாகவும் அவற்றைச் சரிசெய்ய அவகாசம் உள்ளது எனவும் அவர் சனிக்கிழமை பதிலளித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மாநில முதல்வர் ஒன் ஹஃபிஸ் ஃபேஸ்புக்கில் தமது கருத்துகளை வெளியிட்டார்.
பள்ளியில் மேற்கொண்ட சோதனையில் இரு இடங்களில் அது இயங்கியதும் ஒரு பள்ளிக்கு மட்டுமே உரிமம் இருந்ததும் தெரியவந்தது. அந்த மற்றொரு பள்ளிக்கு உள்ளூர்க் குடிமகன் ஒருவர் உரிமையாளராக இருந்தபோதும் அதற்கு வணிக உரிமம் பெறப்படவில்லை என்று கண்டறியப்பட்டது
இது சார்ந்த அனைத்தையும் மாநில அரசாங்கம் முழுமையாக விசாரிக்கும் என்றும் சட்டத்துக்கும் விதிமுறைகளுக்கும் உரிமத்துக்கும் புறம்பான நடவடிக்கைகள் நடந்திருந்தால், அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

