வெளிநாடுகளில் இருந்து மலேசியாவுக்குத் திரும்புவோர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதைக் குறிக்கும் விதத்தில் அவர்களுக்கு மணிக்கட்டுப் பட்டைகள் அணிவிக்கப்படும் என மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று (ஜூன் 11) தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்கள், கட்டாயம் வீட்டில் தனித்திருக்க வேண்டிய 14 நாட்களுக்குள்ளாக, தங்களது மணிக்கட்டுப் பட்டையை அகற்றக்கூடாது என்றும் அவ்வாறு அகற்றினால் அது விதிமீறல் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அத்தகைய விதிமீறலுக்கு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும், அல்லது அபராதம் விதிக்கப்படும்.
"அந்த மணிக்கட்டுப் பட்டையை அவர்கள் எப்போதும் அணிந்திருக்க வேண்டும். வீட்டில் இருக்கும்போதுகூட. தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் காலகட்டத்தில் அதனை அகற்றுவது குற்றம்," என்றார் அவர்.
தனிமைப்படுத்தப்பட்ட 13வது நாளில் அவர்கள் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.
வெளிநாடுகளிலிருந்து மலேசியாவுக்குத் திரும்பும் குடிமக்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என நேற்று அறிவிக்கப்பட்டது.
அவ்வாறு தாயகம் திரும்புவோர் MySejahtera செயலியைப் பதிவிறக்குவது அவசியம்.
கடந்த ஏப்ரல் மாதம் 3ஆம் தேதியிலிருந்து தாயகம் திரும்பிய மொத்தம் 51,422 மலேசியர்கள், ஹோட்டல்கள் உட்பட தனிமைப்படுத்தப்படும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தற்போது 255 பேர் தனிமைப்படுத்தப்படும் வளாகங்களில் தங்களது கொவிட்-19 பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருப்பதாக திரு இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
இன்று மலேசியாவில் புதிதாக 31 கொவிட்-19 சம்பவங்கள் பதிவானதையடுத்து, அங்கு மொத்த எண்ணிக்கை 8,369 ஆகியுள்ளது; இதுவரை மொத்தம் 118 பேர் உயிரிழந்தனர்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

