கோலாலம்பூர்: பழைய கிள்ளான் சாலையிலுள்ள குடியிருப்பு ஒன்றில் ‘ஃபிரிசர்’ (Freezer) எனப்படும் பொருள்களை உறைநிலையில் வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பெட்டியில் பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக மலேசியக் காவல்துறை தெரிவித்துள்ளது.
அப்பெண், அவரது மகனால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
தனது தாயைக் கொலை செய்ததை அந்த ஆடவர் காவல்துறையைத் தொடர்புகொண்டு தெரிவித்ததாகவும் தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அறியப்படுகிறது.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது அந்த ஆடவர் குளிர்பதனப்பெட்டிக்கு அருகே நின்று கொண்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.
பிரிக்பீல்ட்ஸ் காவல்துறை தலைமையக அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் எனக் காவல்துறை தெரிவித்தது.

