கோலாலம்பூர்: திருமணம் செய்துகொண்டு, பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள பெரும்பாலான மணமாகாத மலேசியர்கள் விரும்பினாலும் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம் போன்றவை அவர்களின் அந்த விருப்பத்திற்குக் குறுக்கே நிற்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
மலேசியாவின் தேசிய மக்கள்தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நடத்திய அந்த ஆய்வில் 18 வயதிலும் அதற்கு மேற்பட்ட வயதிலும் இருந்த 3,625 மலேசியர்கள் கலந்துகொண்டனர்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினம், நிதி தொடர்பான பாதுகாப்பின்மை, நிலையற்ற வேலைவாய்ப்பு போன்றவை தங்களின் கல்யாணக் கனவைக் கடினமாக்குவதாக ஆய்வில் கலந்துகொண்டோரில் பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் 90.9 விழுக்காட்டினர் மணம் புரிந்துகொள்ளவும் 91.1 விழுக்காட்டினர் வருங்காலத்தில் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளவும் ஆசைப்படுவதாக ஆய்வை நடத்திய அமைப்பின் தலைவர் ரொஹானி அப்துல் கரிம் கூறினார்.
“இளம் மலேசியர்கள் திருமணம் செய்துகொள்வதையோ பிள்ளை பெறுவதையோ கைவிடவில்லை. ஆனால், அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வலுவான பொருளியல், சமூக ஆதரவு அவர்களுக்குத் தேவைப்படுகிறது,” என்றார் அவர்.
செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) நடைபெற்ற ‘உலக மக்கள்தொகை தினம் 2026’ தொடர்பிலான கொண்டாட்டத்தின்போது, ஆய்வு கண்டறிந்த விவரங்களை திருவாட்டி ரொஹானி வெளியிட்டார்.
கருவுறும் விகிதம் குறைந்து வருவது, முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பது, மாறிவரும் குடும்பக் கட்டமைப்புகள் ஆகியவற்றால் உலகளாவிய மக்கள்தொகைச் சூழல் வேகமாக மாற்றம் கண்டு வருகிறது என்றார் அவர்.
“குடும்பத்தை உருவாக்குமுன், நிலையான வேலைவாய்ப்பு, வாழ்வதற்கான இடம், நிதிச் சுதந்திரம் ஆகியவற்றைப் பெற இன்றைய இளையர்கள் அதிகக் காலம் எடுத்துக்கொள்கிறார்கள்.
“இளம் தலைமுறையினரின் முழுத்திறனையும் வெளிக்கொணர, அனைவரையும் உள்ளடக்கிய தரமான கல்வி மற்றும் பயிற்சியில் அதிகமான முதலீடு தேவை,” என்று அவர் கூறினார்.

