கோலாலம்பூர்: போலியான மருத்துவக் கருவிகளைத் தயாரித்து விற்ற சந்தேகத்தின்பேரில் நடத்தப்பட்ட சோதனையில் 1.33 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பொருள்களை மலேசிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் அமலாக்கப் பிரிவு, ஜோகூர் பாருவில் உள்ள ஒரு கிடங்கு மற்றும் பொதியாக்க நிலையத்தில் சோதனை மேற்கொண்டது.
ஒரு வர்த்தகச் சின்னத்தின் உரிமையாளரிடமிருந்து புகார் கிடைத்ததைத் தொடர்ந்து, புத்ராஜெயா கிளை அமலாக்க அதிகாரிகள் அந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அமலாக்க இயக்குநர் அஸ்மான் ஆடம் தெரிவித்தார்.
அந்தக் கட்டடத்தில் பல்வேறு சுகாதாரப் பரிசோதனைக் கருவிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அவை போலியானவை என சந்தேகிக்கப்படுவதுடன், பயனீட்டாளர்களுக்கு விநியோகம் செய்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது என்றும் திரு அஸ்மான் கூறினார்.
பறிமுதல் செய்யப்பட்டவற்றில் தானியக்க ரத்த அழுத்தமானிகள், மின்னிலக்க வெப்பமானிகள், மின்னிலக்க எடை அளவைகள், இதயத் துடிப்பு கணக்கிடும் கருவிகள், ரத்தச் சர்க்கரை அளவிடும் கருவிகள் உள்ளிட்டவை அடங்கும்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உதவ, அவ்விடத்தின் மேலாளர் ஒருவரையும் அதிகாரிகள் தடுத்துவைத்துள்ளனர்.

