சிட்னி: கொவிட்-19 கொள்ளை நோய் காலத்தின்போது சட்டவிரோதமாகக் கிட்டத்தட்ட 1,700 ஊழியர்களை ‘ஆஸ்திரேலிய விமான நிறுவனமான குவாண்டாஸ்’ பணிநீக்கம் செய்தது.
அதைத் தொடர்ந்து அந்நிறுவனம் மீது ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் ஊழியர்கள் நலச்சங்கம் வழக்குத் தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் அபராதம் விதித்தும் ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்கும்படியும் அந்நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
அந்நிறுவனம் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
அந்நிறுவனம், 2020ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 10 ஆஸ்திரேலிய விமான நிலையங்களில் பணிபுரியும் அந்நிறுவனத்தின் விமானங்களின் செயல்பாட்டைக் கையாளும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.
அவர்களுக்குப் பதிலாக அந்தப் பணிகளை மேற்கொள்ள வேறு ஒரு நிறுவனத்தை ஒப்பந்தம் செய்தது.
இது குறித்து அந்நிறுவனம் ஊழியர்களிடம் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை எனத் தொழிற்சங்கத் தலைவர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.
“நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பணியாளர்களிடமும் நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்,” என நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.