இணையக் குற்றவாளிகள் இலங்கை நிதியமைச்சின் கணினிக் கட்டமைப்பை ஊடுருவி 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் (S$3.2 மில்லியன்) தொகையைத் திருடிவிட்டனர்.
இதனை இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும வியாழக்கிழமை (ஏப்ரல் 23) கொழும்பு நகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஏற்கெனவே கடன் சுமையால் இலங்கை தத்தளித்து வரும் நிலையில், இந்தத் திருட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இலங்கையின் அரசு அமைப்பிலிருந்த இணைய ஊடுருவல் மூலம் திருடப்பட்ட ஆக அதிகமான தொகை இது.
இலங்கை அரசு 46 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதன் விளைவாக,2022ஆம் ஆண்டில் கடுமையான பொருளியல் நெருக்கடியில் சிக்கியது.
அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் இலங்கைக்கு இந்த இணையத் தாக்குதல் ஒரு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
நிதி அமைச்சில் திருடப்பட்ட தொகை, ஆஸ்திரேலியாவிற்குச் செலுத்தப்பட வேண்டிய கடன் தவணையாக ஒதுக்கப்பட்டிருந்தது என்று திரு சூரியப்பெரும கூறியுள்ளார்.

