மிலான்: வாகன ஓட்டுநர்களுக்கு உதவும் நவீன தொழில்நுட்பக் கருவிகளால் அவர்கள் கவனம் தடுமாறும் நிலை ஏற்பட்டு, சாலைப் பாதுகாப்புக்கு பேரபாயம் ஏற்படலாம் என்று வாகன நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒரு வாகனத்தில் ஏற்படக்கூடிய அடிப்படைச் செயல்கருவிகளின் பிரச்சினைகளைவிட ஓட்டுநர்களுக்கு உதவும் நவீன மின்சாதனங்கள் ஆபத்தை விளைவிக்கும் என்று புதன்கிழமை (ஜூலை 15) வெளிவந்த அந்த ஆய்வு எச்சரிக்கிறது.
எனவே ஓட்டுநர்கள் இன்றி செயல்படும் வாகனங்களுக்கான விதிமுறைகளைக் கடுமையாக்கும் நோக்குடன் சில அரசாங்கங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வேளையில், மனிதர்கள் செய்யக்கூடிய தவறுகளால் விளையும் ஆபத்தை அந்த வாகனத்துறையின் ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
சுயமாகச் செயல்படும் வாகனங்களுக்கு ஐரோப்பா முழுவதும் அமெரிக்கக் கார் நிறுவனங்களான ஃபோர்ட், டெஸ்லா ஆகியவை ஒப்புதல் கோரி வருகின்றன.
அத்தகைய வாகனங்களில் பொருத்தப்படக்கூடிய பல நவீன மின்கருவிகளின் நிலை குறித்து அமெரிக்காவில் பலர் கவலையடைந்துள்ளனர்.
“வாகனங்களில் செயல்படுத்தப்படும் நவீன உதவிக் கருவிகள் எவ்வாறு இயங்கும் அல்லது எவற்றை அதனால் செய்யமுடியாது என்பதை ஓட்டுநர்கள் தெளிவாகப் புரிந்திருப்பதை நாம் உறுதி செய்யவேண்டும்,” என இக்நேஷிகோ அல்வரேஸ் என்ற ‘பிரெம்போ’ எனப்படும் இத்தாலியின் கார்நிறுத்தக் கருவி (பிரேக்) தயாரிப்பு நிறுவன ஆராய்ச்சி மேம்பாட்டுத் தலைவர் கூறினார்.
‘தி இக்கனாமிஸ்ட்’ என்ற பொருளியல் குழுமத்தால் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் 1,000 போக்குவரத்து நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
உலகில் கார் தயாரிக்கும் நாடுகள்
உலக அளவிலான கார் தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் அவர்கள் திட்ட வரைவு, உள்கட்டமைப்பு, உற்பத்தி, தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள். பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா அமெரிக்கா ஆகிய நாடுகளில் அவர்கள் நிபுணர்கள் ஆவர்.
உண்மையான அபாயம், மனிதர்களுக்கும் அதிநவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் இயந்திரங்களுக்கும் இடையே நடக்கும் இருதரப்புத் தொடர்பில்தான் உள்ளது என்று ஆய்வின் தலைவர் பிரதிமா சிங் தெரிவித்தார்.

