கோலாலம்பூர்: முறையான அனுமதியும் உரிமமும் இன்றி வெளிநாட்டினரால் நடத்தப்பட்ட 18 கடைகளை கோலாலம்பூர் மாநகராட்சி மூடி முத்திரையிட்டது.
கோலாலம்பூரைச் சுற்றியுள்ள எட்டுப் பகுதிகளில் இயங்கிய மொத்தம் 25 கடைகளில் புதன்கிழமை சோதனை மேற்கொண்டதாக மாநகராட்சி தெரிவித்தது.
கார் பழுதுபார்க்கும் கடைகள், முடிதிருத்தும் கடைகள், உணவகங்கள், மின்னணு உதிரி பாகங்கள் விற்கும் கடைகள், துணிக்கடைகள் போன்ற கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அந்நகராட்சி ஃபேஸ்புக்கில் பதிவிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
முறையான வேலை அனுமதி பெறாமல் வெளிநாட்டினரைப் பணியமர்த்தியதற்காகவும் உரிமம் இல்லாமல் கடை நடத்தியதற்காகவும் 17 எச்சரிக்கை அறிவிப்புகளை வழங்கியதாக அந்நகராட்சி அந்தப் பதிவில் கூறியிருந்தது.
சோதனையின்போது மியன்மார், பங்ளாதேஷ் நாட்டினரால் நடத்தப்பட்ட இரண்டு கடைகளில் இருந்து பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோலாலம்பூரில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் அவ்வப்போது அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

