வாஷிங்டன்: ஈரானுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சுவிட்சர்லாந்துப் பயணத்தை அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் ஒத்திவைத்துள்ளார்.
வியாழக்கிழமை (ஜூன் 18) நள்ளிரவு அவர் சுவிட்சர்லாந்துக்குப் பயணம் மேற்கொள்ளவிருந்தார்.
இந்நிலையில் பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் நிரந்தர அமைதி உடன்பாட்டை எட்டுவதற்கான 60 நாள் காலக்கெடு தொடங்கியுள்ள நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய துணை அதிபர் வேன்ஸ், இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகள் இந்த வார இறுதியில் தொடங்கும் என்று கூறியிருந்தார்
எனினும், அணுசக்திப் பேச்சுவார்த்தைக்கான திட்டங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் பேச்சுவார்த்தைக்கான தளவாட, நிர்வாக ஏற்பாடுகளில் உள்ள சிக்கல்களே இதற்குக் காரணம் என்றும் வெள்ளை மாளிகைச் செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை விளக்கமளித்தார். இருந்தாலும் வாய்ப்பு கிடைத்தவுடன் சுவிட்சர்லாந்து புறப்பட அமெரிக்கக் குழு தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கில் பல மாதங்களாக நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டுவரவும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியனும் ஜூன் 17ஆம் தேதி ஓர் இடைக்கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுவது, அந்நாட்டிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்பை அழிப்பது அல்லது அதன் வீரியத்தைக் குறைப்பது குறித்து இரு தரப்பும் விவாதிக்கவுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், இவ்வளவு சிக்கலான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விவகாரங்களுக்கு 60 நாள்கள் என்ற காலக்கெடு போதுமானதாக இருக்காது என்று அணுசக்தி வல்லுநர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், தேவைப்பட்டால் இந்த காலக்கெடுவை நீட்டித்துக் கொள்ள ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

