ஏஞ்சலஸ் (பிலிப்பீன்ஸ்): பிலிப்பீன்சில் இன்னமும் கட்டி முடிக்கப்படாத கட்டடம் இடிந்து விழுந்ததில் மீட்புக் குழுவினர் மேலும் இருவரை மீட்டுள்ளனர். இதனால் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது என்று திங்கட்கிழமை ( மே 25) அதிகாரிகள் தெரிவித்தனர்.
இடிபாடுகளில் சிலர் சிக்கியிருக்கலாம் என்ற அறிகுறிகள் தென்பட்டதால் இரவு முழுவதும் மீட்புக் குழுவினர் தேடும் பணிகளைத் தொடர்ந்தனர்.
மீட்கப்பட்ட இருவரில் ஒருவருக்கு லேசான இதயத்துடிப்பு இருந்தது. ஆனால் அவர் பின்னர் இறந்துவிட்டார்.
வட்டாரத் தீத்தடுப்புப் பிரிவின் பொதுத் தொடர்பு அதிகாரியான மரியா லியா சாஜிலி, மற்றொருவர் மீட்கப்படுவதற்கு முன்பே மாரடைப்பால் உயிரிழந்தார் என்றார்.
கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர்.
மணிலாவுக்குத் தெற்கே ஏஞ்சலஸ் நகரில் அரைகுறையாகக் கட்டப்பட்டிருந்த கட்டடம் இடிந்து விழுந்தது.
இடிபாடுகளில் சிக்கியிருக்கும் மற்றொரு உடலை மீட்க மீட்புப் பணியாளர்கள் போராடி வருகின்றனர் என்றும் திருவாட்டி சாஜிலி கூறினார். ஆனால் மீட்கப்பட்ட பிறகே இறந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகாரபூர்வமாகச் சேர்க்கப்படும் என்றார் அவர்.
இடிபாடுகளுக்கு அடியில் சுவாசம் மற்றும் இதயத் துடிப்புக்கான அறிகுறிகள் இருந்ததால் மேலும் சிலர் சிக்கியிருக்கக் கூடும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதுவரை 17 பேர் காணவில்லை. இவர்களில் பலர் அங்கு வேலை பார்த்த கட்டுமான ஊழியர்கள்.
இறந்தவர்களில் 65 வயது மலேசிய நாட்டவரும் ஒருவர். கட்டட இடிபாட்டால் அருகே இருந்த ஹோட்டலும் சேதமடைந்தது. அதிலிருந்து அவரது உடல் மீட்கப்பட்டது.
அங்கீகரிக்கப்பட்ட அனுமதியின்படி, இடிந்து விழுந்த கட்டடம் ஒன்பது மாடி குடியிருப்பு மற்றும் ஹோட்டலாகக் கட்டப்படவிருந்தது. ஆனால் கூடுதலாக 10வது மாடியில் ஒரு நீச்சல் குளம் கட்டப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஏஞ்சலஸ் நகர மேயர் கார்மேலோ லஸாடின், கட்டட உரிமையாளரைத் தேடி வருவதாகக் கூறினார்.
உரிமையாளரை விசாரித்த பிறகே கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணத்தையும் அங்கு எத்தனை பேர் வேலை செய்தார்கள் என்ற விவரத்தையும் அறிய முடியும் என்று அவர் தெரிவித்தார்.

