மாஸ்கோ: நகொர்னோ-கரபாக்கில் உள்ள எரிபொருள் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பிலும் நெருப்பிலும் 170 பேர்வரை உயிரிழந்துவிட்டதாக ஆர்மன்பிரஸ் செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
அசர்பைஜான் நடத்திய மின்னல்வேக ராணுவத் தாக்குதலில் ஆர்மீனிய வீரர்கள் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான ஆர்மீனியர்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கையில் வெடிப்பு ஏற்பட்டது.
வெடிப்புக்கான காரணத்தை உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
முன்னதாக, 68 பேர் உயிரிழந்ததாக கரபாக் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலை தெரிவித்தனர். அந்த எண்ணிக்கை இப்போது வெகுவாக அதிகரித்துள்ளது.
வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணி தொடர்கிறது.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, நகொர்னோ-கராபாக் பகுதியில் வாழ்ந்துவந்த 120,000 ஆர்மீனியர்களில் 84,700க்கும் மேற்பட்டோர் எல்லைகடந்து ஆர்மீனியாவுக்குச் சென்றுவிட்டனர்.