கோலாலம்பூர்: வெளிநாட்டுப் பங்கு வெளியேற்றங்களால் மலேசியாவின் ரிங்கிட், சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகராக 10 மாதங்களில் இல்லாத அளவுக்குச் சரிந்தது.
அதே வேளையில், சிங்கப்பூரின் கடுமையான நாணயக் கொள்கை அதன் நாணயத்திற்கு ஆதரவாக உள்ளது.
புதன்கிழமை (செப்டம்பர் 9) சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 0.2 விழுக்காடு சரிந்து 3.2162 ஆனது. தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக பங்குச் சந்தை முதலீடுகள் வெளியேறியதால், இது கடந்த நவம்பர் மாதத்திற்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த மதிப்பாகும்.
சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் கடுமையான நாணயக் கொள்கை காரணமாக சிங்கப்பூர் நாணயத்தின் மதிப்பு தொடர்ந்து வலுவாக உள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் US$486 மில்லியன் (S$615 மி.) முதலீடுகள் வெளியேறியதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் இதுவரை உலகளாவிய நிதி அமைப்புகள் 122 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உள்நாட்டுப் பங்குகளை விற்றுள்ளன.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், எரிபொருள் விலை உயர்ந்த போதிலும் மானிய விலையிலான எரிபொருள் ஒதுக்கீட்டை மீண்டும் வழங்கியுள்ளார்.
இதனால் நாட்டின் நிதி நிலைமையில் ஏற்படும் தாக்கத்தை வர்த்தகர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
திரு அன்வார், 2027ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தை அக்டோபர் 9ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவுப் புரட்சியால் உருவான மலேசியாவின் வலுவான பொருளியல் வளர்ச்சி, ரிங்கிட்டிற்கு ஆதரவளிக்கக்கூடும். இந்த வளர்ச்சியே கடந்த வாரம் பேங்க் நெகாரா மலேசியாவை தனது நிலைப்பாட்டை கடுமையாக மாற்றிக்கொள்ளும் அறிகுறிகளை வெளிப்படுத்தக் காரணமானது.


