பிரசல்ஸ்: அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வலிமையைப் பெற்றிருக்க வேண்டும் என்று போலந்துப் பிரதமர் டோனல்ட் டஸ்க் கூறியுள்ளார். இதற்கு முன்னர் இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக எதிர்ப்பு இருந்தபோதிலும் தற்போதைய நிலையில் அதை ஒதுக்கிவைத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தனது தற்காப்புக்கு ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவை நம்பி இருந்துள்ளன. அமெரிக்கா தற்பொழுது இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் தனது கவனத்தை செலுத்தி வருவதுடன் ஐரோப்பாவை காப்பதில் அதற்கு அக்கறையில்லை என்ற ஐரோப்பிய நாடுகள் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளும் இந்தப் புதிய போக்கை கொண்டிருக்கவில்லை, அதுவும் குறிப்பாக ரஷ்யாவிடமிருந்து தள்ளியிருக்கும் நாடுகள் தற்காப்பு செலவினத்தை அதிகரிக்க ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
தற்காப்பு செலவினத்தை அதிகரிப்பது குறித்த ஐரோப்பிய நாடுகளின் உச்சநிலை மாநாட்டுக்குப் பிறகு பேசிய போலந்துப் பிரதமர் டோனல்ட் டஸ்க், மற்ற நாடுகளைவிட தற்காப்புக்கு குறைவாக செலவிடும் நாடுகள் அதை அதிகரிக்க ஐரோப்பிய ஒன்றியம் நிர்ணயித்துள்ள ஐந்து ஆண்டு காலகட்டத்தை ஏற்பதில் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
“பார்வையாளர்களுக்குப் பின்னால் இந்தப் பிரச்சினை சில நாடுகளிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக தற்காப்புக்கு குறைவாக செலவிடும் நாடுகளுக்கு இது ஏற்புடையதாக அமையவில்லை. பல பெரிய நாடுகள் தற்பொழுது குறைவாகவே செலவிடுகின்றன. அவை, தற்போதைய நிலையில் தற்காப்பு செலவினத்தை அதிகரிக்க விரும்பவில்லை,’ என்று திரு டோனல்ட் டஸ்க் செய்தியாளர் மாநாட்டில் கூறினார்.