காத்மாண்டு: உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டிற்கான இமயமலை அடிவார முகாமில், பனிக்கட்டிகள் சிதறிக் கிடக்கும் ஒரு பெரும் பாறை உட்பட, ஒரு பெரும் பிளவு காரணமாகப் பாதை திறக்கப்படுவது தாமதமாவதால் நூற்றுக்கணக்கான மலையேறிகள் அங்கு சிக்கித் தவிக்கின்றனர் என்று அதிகாரிகளும் மலையேறிகளும் வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 24) தெரிவித்தனர்.
8,849 மீட்டர் (29,032 அடி) உயரமுள்ள இந்த உச்சிக்கு ஆண்டுதோறும் மலையேறும் பருவம் ஏப்ரல் முதல் மே வரை தொடரும். காற்று வீசும், பனி மூடிய இந்தச் சிகரத்தை அடைய இந்த மாதங்கள் சிறந்த வானிலையை வழங்குகின்றன.
ஆனால், இந்த ஆண்டு அடிவார முகாமுக்கு மேலே, கயிறுகளைப் பொருத்துதல், ஏணிகளை வைத்தல் மற்றும் அபாயகரமான கும்பு பனிச்சரிவு வழியாக முகாம் 2க்கு ஒரு பாதுகாப்பான பாதையை உருவாக்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ள அனுபவமிக்க ஷெர்பா மலையேறிகளின் பாதையை, 100 அடி (30 மீட்டர்) உயரமுள்ள ஒரு பெரும் ஆபத்தான பனிக்கட்டிப் பாளம் தடுத்துள்ளது.
“இது இப்போது அனைவரின் பயணத் திட்டங்களையும் பாதித்துள்ளது. இந்தத் தேக்கநிலையால் அனைத்துப் பயணங்களும் தாமதமாகி வருகின்றன,” என்று அமெரிக்காவைச் சேர்ந்த மேடிசன் மவுண்டனியரிங் நிறுவனத்தின் காரெட் மேடிசன், அடிவார முகாமிலிருந்து ராய்ட்டர்சிடம் கூறினார்.
“இது உடனடியாக விழ வாய்ப்புள்ளது போல் தெரிகிறது, இருப்பினும், இதற்குச் சிறிது காலம் ஆகலாம்,” என்று தனது 16வது மலையேற்றத்தில் அனைத்துலக மலையேறிகள் குழுவை வழிநடத்தும் திரு மேடிசன் கூறினார்.
“ஷெர்பாக்கள் அல்லது ‘பனிச்சரிவு மருத்துவர்கள்’ என்று பிரபலமாக அழைக்கப்படும் இவர்களின் பணியைத் தடுத்து நிறுத்தியுள்ள இந்தப் பிளவின் வழியாகச் செல்ல சரியான அல்லது சாத்தியமான வழிகள் எதுவும் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
“இந்தப் பாதை பொதுவாக ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் திறக்கப்படும்,” என்று நேப்பாள சுற்றுலாத் துறையின் திரு ஹிமால் கௌதம் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“தற்போது பனிப்பாறை உருகினாலோ அல்லது சரிந்தாலோ, ‘பனிச்சரிவு மருத்துவர்கள்’ பாதையைத் திறக்க வழிவகை ஏற்படும். அதன்மூலம், மலையேறிகள் திட்டமிட்டபடி உச்சிக்குச் செல்லும் முயற்சிகளை மேற்கொள்ள முடியும்,” என்று திரு கௌதம் மேலும் கூறினார்.
இந்தத் தேக்கநிலை தொடர்ந்தால், அபாயத்தை மதிப்பிடுவதற்கும் மாற்றுப் பாதைகளை ஆராய்வதற்கும் அதிகாரிகள் மேலும் ஷெர்பா, மலையேறிகளை அனுப்புவார்கள் என்று அவர் கூறினார். எட்டு ‘பனிச்சரிவு மருத்துவர்கள்’ கொண்ட குழு ஒன்று தற்போது அடிவார முகாமில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

