ஹனோய்: வியட்னாமியத் தலைநகர் ஹனோயில் கனமழை தொடர்ந்ததை அடுத்து, டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
டெங்கி பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஏற்றம் கண்டுள்ளது.
வியட்னாமிய அதிகாரிகள் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில், ஹனோயில் 336 பேருக்கு டெங்கிக் காய்ச்சல் ஏற்பட்டதாக அந்நகரில் உள்ள நோய் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.
நகரில் உள்ள 17 பகுதிகளில் டெங்கிக் காய்ச்சல் பாதிப்பு புதிதாக ஏற்பட்டுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 30 பகுதிகளில் டெங்கிக் காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதிகளில் இருப்போரை அதிகாரிகள் மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
டெங்கி பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலருக்கு மிக மோசமான ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரக நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப்போரும் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்போரும் உடற்பருமன் உள்ளவர்களும் மூத்தோரும் கர்ப்பிணிகளும் டெங்கியால் அதிக பாதிப்படையும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
காய்ச்சல், தலைவலி, குமட்டல், மூக்கு அல்லது ஈறுகளிலிருந்து ரத்தக் கசிவு, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடும்படி வியட்னாமிய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.