சோல்: தென்கொரியாவின் பதின்மவயதினர் புரியும் டீப்ஃபேக் மற்றும் இதர மின்னிலக்கப் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் ஏறத்தாழ இருமடங்கு அதிகரித்துள்ளது.
இத்தகவலைத் தென்கொரியாவின் தேசியக் காவல்துறை ஆணையம் திங்கட்கிழமை (செப்டம்பர் 15) வெளியிட்டது.
பிறருடைய உடல்களை முறையற்ற வகையில் காணொளி எடுத்தது, டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசப் படங்கள் மற்றும் காணொளிகளை விநியோகம் செய்ததது போன்ற பாலியல் குற்றம் புரிந்ததாக 2024ஆம் ஆண்டில் 1,372 பதின்மவயதினர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
2020ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 710ஆக இருந்தது.
டீர்ஃபேக் குற்றங்கள் 2022ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பத்து மடங்கு அதிகரித்தது.
இவ்வாண்டின் முதல் எட்டு மாதங்களில், டீப்ஃபேக் பாலியல் குற்றங்கள் புரிந்ததாக 556 பதின்மவயதினர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாலியல் குற்றம் புரிவது மிகக் கடுமையான குற்றம் என மாணவர்கள் பலருக்குத் தெரியவில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன.