பெட்டாலிங் ஜெயா: தைப்பூசத் திருநாள் சடங்குகளையும் இந்து சமயத்தினரையும் இழிவுபடுத்தும் வகையில் ஆஸ்ட்ரோ ஆடியோ பிரிவின்கீழ் செயல்படும் எரா எஃப்எம் வானொலி நிலையத்தின் அறிவிப்பாளர்கள் பேசியதாகக் கூறப்பட்டது.
அந்த அறிவிப்பாளர்களைப் பணியிடை நீக்கம் செய்ததாக மலேசியாவின் ஆஸ்ட்ரோ நிறுவனம் தெரிவித்தது.
இதற்கிடையே, அந்நிறுவனத்திற்குக் கிட்டத்தட்ட S$75,906 (RM 250,000) அபராதத்தை அந்நாட்டுத் தொடர்பு, பல்லூடக ஆணையம் செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 11) விதித்தது.
மார்ச் 7ஆம் தேதி எரா எஃப்எம் வானொலியின் உரிமத்தைத் தற்காலிகமாக ஆணையம் ரத்து செய்திருந்தது.
அந்த உத்தரவுக்கு எதிராக ‘ஆஸ்ட்ரோ ஆடியோ’ மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை மதிப்பாய்வு செய்த ஆணையம் உரிம ரத்துக்கான அறிவிப்பை விலக்கிக்கொண்டதுடன் அந்நிறுவனத்திற்கு அபராதம் செலுத்தும்படி உத்தரவிட்டது.
நிறுவனத்தின் மேல்முறையீட்டை மதிப்பாய்வு செய்து, உரிமையாளர் எடுத்த சீர்திருத்த நடவடிக்கைகள், சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட முறையான மன்னிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு , உரிமத்தைத் தற்காலிகமாக ரத்து செய்வதற்கான உத்தரவை திரும்பப் பெற்றுக்கொண்டது என அது வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இந்தத் தற்காலிகத் தடை, அதே உரிமத்தின்கீழ் இயங்கும் பிற வானொலி நிகழ்ச்சிகளையும் பாதிக்கும் என்பதால் அம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அது சொன்னது.