சோல்: வடகொரியாவின் ஒலிபெருக்கிகளால் ஏற்படும் இரைச்சலால், கொரிய எல்லையில் வசிப்பவர்கள் பல மாதகாலமாக அவதியுறுகின்றனர். இதனால் தங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதாக சிலர் புலம்புவதை உள்ளூர் அரசாங்கங்கள் வியாழக்கிழமை (நவம்பர் 21) தெரிவித்தன.
தென்கொரியாவின் கியோங்கி மாநிலம், கிம்போவில் மக்களின் மனநலனைக் கண்டறிய அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், 28 விழுக்காட்டினர் கடும் மனநலப் பிரச்சினைகளைச் சந்திப்பது தெரியவந்துள்ளது.
ஆகஸ்ட் 8 முதல் 14 வரை கிம்போ நகரின் மனநல நிலையம் நடத்திய அந்த ஆய்வு, இரு கொரியாக்களின் எல்லையில் வசிக்கும் 102 பேரின் மனநலனைக் கண்டறிய முற்பட்டது.
பெரும்பாலும் முதியவர்களைப் பாதிக்கும் இரைச்சலால் அவர்களிடம் தூக்கமின்மை, மனவுளைச்சல், பதற்றம் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. கடந்த செப்டம்பரில் ஒலிபரப்புகள் தொடங்கியதிலிருந்து இத்தகைய அறிகுறிகள் குறித்து தகவல்கள் வெளியாகின.