ஈப்போ: மத்திய கிழக்குப் போரால் ஏற்பட்டுள்ள தாக்கத்தைக் காரணம் காட்டி, குறிப்பாக, குறைந்த விலையில் வழங்கப்படும் வீடுகளின் விலையை உயர்த்தக்கூடாது என்று மலேசிய வீடமைப்பு, உள்ளாட்சி அமைச்சரான ங்கா கோர் மிங் கட்டுமானத் துறை நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“உலகச் சந்தையில் கட்டுமானப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளபோதும், வீடமைப்பு, உள்ளாட்சி அமைச்சு மக்கள் வசதிக்கான வீடுகளின் விலையை நிலையாக வைத்திருக்க உறுதியாகச் செயல்பட்டு வருகிறது.
“உலகளாவிய நெருக்கடி மலேசியாவையும் பாதித்துள்ளது. எனினும், அதனை வாய்ப்பாகக் கொண்டு கட்டுமானச் செலவுகளை அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இப்போதைய சூழலில் கட்டுமானப் பொருள்களைக் கொண்டுசெல்லும் வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருளுக்குக்கூட அரசு அதிக உதவித் தொகையை வழங்கி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாதந்தோறும் ஏறத்தாழ நான்கு பில்லியன் ரிங்கிட் எரிபொருள் மானியத்தை அரசாங்கம் வழங்கி வருவது, மக்கள் சுமையைக் குறைக்கும் முயற்சியாகும் என்று அமைச்சர் விளக்கினார்.
இதனால், கட்டுமானத் துறையினர் சமூக பொறுப்புடன் நடந்துகொண்டு, வீட்டு விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

