சிட்னி: கிழக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள நெடுஞ்சாலையில் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தபோது, தமது பாதத்தில் ஏதோ நகர்வதை உணர்ந்த பெண் ஓட்டுநர் ஒருவர், உயிருக்கு ஆபத்தான ‘டைகர்’ பாம்பு தமது காலில் ஏறுவதைக் கண்டார்.
காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) அந்தத் தகவலைத் தெரிவித்தது.
மெல்பர்னுக்கு அருகே, மோனாஷ் நெடுஞ்சாலையில் ஓர் ஓரத்தில் அதிகாரிகள் அவரைக் கண்டனர். அவர் காலணிகளின்றி, அதிர்ச்சி அடைந்திருந்த நிலையில் காணப்பட்டதாக விக்டோரியா மாநிலக் காவல்துறையினர் கூறினர்.
காலில் ஏறிக்கொண்டிருந்த பாம்பிடமிருந்து தன்னைப் பாதுகாத்து, தமது காரை பாதுகாப்பாக அவர் நிறுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
‘டைகர்’ பாம்புகள் உலகின் மிக நச்சுவாய்ந்த பாம்புகளில் ஒன்றாகும் என அந்த மாநிலத்தின் வனத்துறை தெரிவித்தது. உலகில், உயிருக்கு மரணத்தை விளைவிக்கக்கூடிய 25 பாம்புகளில் கிட்டத்தட்ட 20 ஆஸ்திரேலியாவில் உள்ளன.
அந்தப் பெண் பாம்பால் கடிக்கப்படவில்லை என்பதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக காவல்துறை கூறியது.
பின்னர், பாம்புகளைப் பிடிக்கும் ஒருவர், வாகனத்திலிருந்து ஏறக்குறைய ஒரு மீட்டர் நீளமான அந்தப் பாம்பை அகற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.