ஈராக்கில் அமெரிக்க அரசதந்திர நிலையத்தின்மீது வானூர்தித் தாக்குதல்

ஈராக்கில் அமெரிக்க அரசதந்திர நிலையத்தின்மீது வானூர்தித் தாக்குதல்

1 mins read
8c710c22-a189-4db2-ad93-32d35aed94cd
ஈராக்கின் பாஸ்ரா நகரில் அமெரிக்கா பயன்படுத்தும் கிடங்கின்மீது இம்மாதம் (மார்ச்) 7ஆம் தேதி ஆளில்லா வானூர்தி தாக்கியது. - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: ஈராக்கில் உள்ள அமெரிக்க அரசதந்திர நிலையமொன்றின்மீது செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) ஆளில்லா வானூர்தி தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடுத்துள்ள போருக்குப் பதிலடியாக டெஹ்ரான் ஆதரவுக் கிளர்ச்சிப் படையினர் அந்தத் தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. வா‌ஷிங்டன் போஸ்ட் ஊடகம் அந்தத் தகவலை வெளியிட்டது.

பாக்தாத் விமான நிலையத்திற்கும் ஈராக்கிய ராணுவத் தளங்களுக்கும் அருகே உள்ள அரசதந்திரத் துணை நிலையத்தை ஆளில்லா வானூர்தி தாக்கியதாகக் கூறப்பட்டது.

தாக்குதலில் யாரேனும் காயமடைந்தனரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதன் தொடர்பில் வெள்ளை மாளிகை, அமெரிக்க வெளியுறவு அமைச்சு, தற்காப்பு அமைச்சு ஆகியவை உடனடியாகக் கருத்து எதனையும் கூறவில்லை.

பாக்தாத்தில் உள்ள கட்டடத்தை நோக்கி ஆறு ஆளில்லா வானூர்திகள் அனுப்பப்பட்டதாக வா‌ஷிங்டன் போஸ்ட் தெரிவித்தது. அவற்றில் ஒன்று கட்டடத்தின்மீது பாய்ந்ததாகவும் மற்ற ஐந்தும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.

ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் சென்ற மாதம் (பிப்ரவரி) 28ஆம் தேதி போரைத் தொடங்கின. ஈரான் பதிலுக்கு இஸ்ரேலையும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களையும் தாக்கியது.

ஈரானியத் தரப்பில் 1,300க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததாக ஐக்கிய நாட்டு நிறுவனத்திற்கான அந்நாட்டுத் தூதர் தெரிவித்தார்.

ஈரானியத் தாக்குதல்களில் 11 பேர் மாண்டதாக இஸ்ரேல் கூறியது. அமெரிக்க ராணுவம், தனது படையினரில் 7 பேர் உயிரிழந்ததாகவும் கிட்டத்தட்ட 150 பேர் காயமுற்றதாகவும் சொன்னது.

குறிப்புச் சொற்கள்