சிலாங்கூரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடிப்பு

சிலாங்கூரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடிப்பு

1 mins read
1780af5f-26a0-4181-8936-94b25988f743
மூன்று ஆண்கள், மூன்று பெண்கள் என 17 முதல் 31 வயதுக்குட்பட்ட ஆறு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். - படம்: பிக்சாபே

ஷா ஆலம்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், அம்பாங் பகுதிகளில் செயல்பட்டு வந்த நான்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை மலேசியக் காவல்துறையினர் முறியடித்துள்ளனர். அண்மையில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில், ஏறத்தாழ 17.8 மில்லியன் மலேசிய ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

மூன்று ஆண்கள், மூன்று பெண்கள் என 17 முதல் 31 வயதுக்குட்பட்ட ஆறு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். சுற்றுப்பயணிகளாக மலேசியாவுக்குள் நுழைந்த அந்த ஆறு பேரும் ஐரோப்பிய நாடு ஒன்றுக்குக் கொண்டு செல்வதற்காக ஒன்பது பெட்டிகளில் 13.85 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

போதைப்பொருளைக் கடத்த அவர்களுக்குத் தலா 3,000 முதல் 5,000 யூரோவரை பணம் வழங்குவது குறித்து பேசப்பட்டதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் ஷசாலி கஹார் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மற்றொரு சம்பவத்தில், கடந்த மே 11ஆம் தேதியன்று அம்பாங் ஜெயா பகுதியில் போதைப்பொருள் கடத்தியதற்காக 22 வயது உள்ளூர் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவர் பயன்படுத்திய வாகனத்தைச் சோதனை செய்ததில், 3.95 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் அடங்கிய 79 பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன.

குறிப்புச் சொற்கள்