துபாய்: பயணிகள் கடப்பிதழ் அல்லது ‘போர்டிங் பாஸ்’ இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது துபாய் அனைத்துலக விமான நிலையம்.
புதிய உயிரளவை முறை (biometric system) அதற்கு வகைசெய்வதாக ‘கல்ஃப் நியூஸ்’ செய்தி தெரிவிக்கிறது.
அனைவருக்கும் தடையற்ற பயணத்தை வழங்கும் நோக்கத்துடன் விவேகமான சேவைகளை வழங்குவதற்கான முயற்சிகளை துபாய் எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
உயிரளவை முறை மூலம் பயணிகளின் அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு அனுமதிக்கப்படுவர் என்பதால் அவர்கள் இனிக் கடப்பிதழை அல்லது அடையாள அட்டையைக் காட்ட வேண்டியிராது என்று அச்செய்தி குறிப்பிட்டுள்ளது.
துபாய் அனைத்துலக விமான நிலையத்தின் புறப்பாட்டு முனையத்தில் பயணிகளின் முகம் மற்றும் கருவிழிகள் உயிரளவை முறை மூலம் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு, அனுமதி அளிக்கப்படும்.
உள்ளூர்வாசிகள், வெளிநாட்டவர்கள் என அனைவருக்கும் இந்தப் புதிய முறை பொருந்தும்.
எதிர்காலப் பயணங்களுக்காக, பயணிகளின் உயிரளவைத் தகவல்கள் ‘ஜிடிஆர்எஃப்ஏ’ எனும் குடியிருப்பிட, வெளிநாட்டினர் விவகார பொது இயக்ககத்தின் கணினி அமைப்பில் சேமித்து வைக்கப்படும்.