மணிலா: பிலிப்பீன்சில் 2028ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் துணை அதிபர் சாரா டுட்டர்டே போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
நாட்டின் சேவைக்காக தமது வாழ்க்கை, பலம், எதிர்காலம் ஆகியவற்றை அர்பணிப்பதாகத் திருவாட்டி டுட்டர்டே கூறினார்.
2028ஆம் அதிபர் தேர்தலில் திருவாட்டி டுட்டர்டே வலுவான வேட்பாளராக இருப்பார் என்று தனியார் துறை நடத்திய கருத்துக் கணிப்புகள் சுட்டுகின்றன.
பிலிப்பீன்ஸ் அரசியலமைப்புச் சட்டத்தின்படி அதிபராக உள்ளோர் ஆறு ஆண்டு தவணைக் காலத்துக்கு மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும். அந்த வகையில் அரசியல் வைரியான தற்போதைய அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் மீண்டும் அதிபர் போட்டியில் பங்கேற்க முடியாது.
திருவாட்டி சாரா டுட்டர்டே முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டேயின் மகள். போதைப் பொருளுக்கு எதிராக அதிபராக இருந்தபோது மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக கொலைக் குற்றத்தை திரு டுட்டர்டே எதிர்கொள்கிறார். அவர் ஹேக் சிறையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

