வெலிங்டன்: நியூசிலாந்தின் வடக்குத் தீவுப் பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 25) அதிகாலை 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு தொடர் பின்னதிர்வுகள் பதிவாகின.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.51 மணியளவில் அந்த நிலநடுக்கம் பதிவானது. அடுத்த ஐந்து மணி நேரத்தில் மட்டும் 73 பின்னதிர்வுகள் பதிவாகின. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
இருப்பினும், நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான கட்டடச் சேதங்களோ, உயிரிழப்புகளோ, காயங்களோ ஏற்படவில்லை என்று அந்நாட்டு அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலநடுக்கம் காரணமாகச் சில இடங்களில் லேசான நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் சாலைகள் மூடப்பட்டன. அத்துடன் மின்சாரம், நீர் விநியோகம், தகவல் தொடர்புச் சேவைகள் வழக்கம்போல இயங்கி வருகின்றன.
நிலநடுக்கம் நிலப்பகுதியில் ஏற்பட்டதால் சுனாமி ஆபத்து ஏதும் இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவசரகால மீட்புக் குழுவினர், சாலைப் பராமரிப்புக் குழுவினர் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தொடரும் பின்னதிர்வுகளுக்குத் தயாராக இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

