கரகாஸ்: வெனிசுவேலாவில் புதன்கிழமை (ஜூன் 24) பிற்பகல் ஏற்பட்ட தொடர் நிலநிடுக்கத்தால் பலர் இடிபாடுகளில் சிக்கி மாண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அந்நாட்டு அதிகாரிகள் இதுவரை மரண எண்ணிக்கையை உறுதிசெய்யவில்லை.
தலைநகர் கராக்கசிலிருந்து 160கிலோமீட்டர் தூரத்தில் 7.2 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது நடந்த ஒரே நிமிடத்தில் மற்றொரு 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் அந்நாட்டை உலுக்கியது.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோர், மாண்டோர் எண்ணிக்கை அதிக அளவு இருக்கும் என்று அஞ்சுகின்றனர். பல கட்டடங்கள் இடிந்து விழுந்துவிட்டன.
அமெரிக்கப் புவியியல் ஆய்வக விஞ்ஞானிகள் (USGS) பல்லாயிரக்கணக்கான மக்கள் நிலநடுக்கத்தில் மரணமடைந்திருக்கலாம் என்று கருத்துரைத்தனர். நாடு முழுவதும் நிலநடுக்கம் பாதித்துள்ளதால் 10,000 முதல் 100,000 பேர் வரையில் அதில் மாண்டிருக்கலாம் என்று அவர்கள் கணித்துள்ளனர்.
“கட்டடங்களும் வீடுகளும் இடிந்துள்ளன. எங்களால் முடிந்த அளவு பொதுக் கட்டமைப்புகளைக் கொண்டு செயலாற்றிவருகிறோம். அனைத்துக் காவல்துறை, தீயணைப்புப் படை அதிகாரிகளும் உதவி வருகின்றனர்,” என்று வெனிசுவேலாவின் உள்துறை அமைச்சர் டியோஸ்டாடொ கபெலோ தேசியத் தொலைக்காட்சியில் தெரிவித்தார்.
ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம்
இதனிடையே, ஜப்பானின் வடக்குப் பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 25) 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அந்நாட்டு வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.
இவாத்தே நகருக்கு அருகில் 44 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டது. தலைநகர் தோக்கியோ வரை நிலநடுக்கம் உணரப்பட்டது என்று அதிகாரிகள் கூறினர்.
பெரிய அளவில் சேதங்கள் ஏற்படவில்லை எனவும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் வானிலை ஆய்வகம் உறுதிப்படுத்தியது.
இருப்பினும், இவாத்தே நகரில் இயங்கும் விரைவு ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன; சில பள்ளிகள் மூடப்பட்டன.
அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக கியோடோ ஊடகம் தெரிவித்தது. ஒருசில இடங்களில் மின்தூக்கிகளில் சிக்கிக்கொண்டோரைத் தீயணைப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ளூர் ஆட்சியாளர்களுடன் அமைச்சர்களையும் அரசாங்க அமைப்புகளையும் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொண்டதாக ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி கூறினார்.

