வாஷிங்டன்: அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலமான லூசியானாவில் எட்டுக் குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஒன்று முதல் 14 வயது வரையிலான அந்தக் குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற துப்பாக்கிக்காரனைக் காவல்துறை துரத்திப் பிடித்து சுட்டு வீழ்த்தியதாக உள்ளூர் அதிகாரிகள் கூறினர். லூசியானாவின் ஷ்ரீவ்போர்ட் நகரில் நிகழ்ந்த அச்சம்பவம் குடும்ப வன்முறை தொடர்பானது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
வீட்டிற்குள் நுழைந்த சந்தேக நபர் முதலில் ஒரு பெண்ணைச் சுட்டதாகவும் பின்னர் குழந்தைகள் இருந்த இடத்தை நோக்கிச் சென்று சரமாரியாகச் சுட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வீட்டில் ஏழு குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. எட்டாவது குழந்தை மாடிப்படி வழியாக தப்பிக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக ஷ்ரீவ்போர்ட் காவல் துறை செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டஃபர் பார்டெலோன், கேடிபிஎஸ் என்னும் உள்ளூர் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.
இது ஒரு கொடூரமான குற்றம் என்று அவர் குறிப்பிட்டார்.
அந்தக் கொடூரத்தை நிகழ்த்திய சந்தேக நபர் ஷமார் எல்கின்ஸ் எனக் காவல்துறை அடையாளம் கண்டுள்ளதாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் ஷ்ரீவ்போர்ட் நகர மேயர் அலுவலகத்தைச் சேர்ந்த லீ ஆன் எவன்ஸ்கி தெரிவித்தார்.

